தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் என்ற அந்தஸ்தை விஜய் பெறுகிறார்
சென்னை :-
நடிகர் விஜய் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் பெயர் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மாஸ்டர் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
விஜயின் படத்தின் அறிவிப்பு வரும்போதே பல்வேறு விமர்சனங்களும் எதிர்பார்ப்புகளும் உருவாகுவது இயல்புதான். எனவே, மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்தப் படம் முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில் அடுத்ததாக விஜய் தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் தமிழ் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த படத்தை பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது.
விஜய்க்கு 120 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் என்ற அந்தஸ்தை விஜய் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.