தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனையொட்டி அரசு, தனியார் சுவர்களில் இருந்த விளம்பரங்கள் நகர பகுதிகளில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்பட்டன.
கொடிகள் கழற்றப்பட்டதுடன் கொடிக்கம்பங்களையும் அகற்றும் பணிகளில் அலுவலர்கள் ஈடுபட்டனர். நகராட்சி பணியாளர்கள் தொடர்ச்சியாக இந்த தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதை போன்று நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர், அண்ணா சிலைகள் உட்பட நகர பகுதிகளில் உள்ள சிலைகள் சாக்கு, பிளாஸ்டிக் பைகளை கொண்டு மூடப்பட்டிருந்தன. ஆனால் நேற்று காலையில் இந்த சிலைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது அது தொடர்பான விபரங்கள் தங்களுக்கு தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆகவே மூடப்பட்ட சிலைகளை திறந்து யார்? என்பது தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த மறுநாள் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க ‘1950’ என்ற எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம் என்று கூறினார். ஆனால் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1950 என்ற எண்ணை அழைத்தால் அதில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று ஒலிப்பதிவு வாயிலாக கூறப்படுகிறது.
ஆனால் இணைப்பில் வருகின்ற அலுவலரோ எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான புகார்களை மட்டுமே பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள் எங்களிடம் பதிவு செய்ய இயலாது என்று தெரிவிக்கிறார். இது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.













Leave a Reply