மம்முட்டிக்கு பதில் பசுபதி கிடைத்தார் தண்டட்டி இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ராம் சங்கைய்யா!
புதுவரவு சினிமா : ”தண்டட்டி”
மம்முட்டிக்கு பதில் பசுபதி கிடைத்தார்; தண்டட்டி இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ராம் சங்கைய்யா…!
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’ . ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார்.
இந்த படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தி.நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கதையின் நாயகனாக முதன்மை கேரக்டரில் பசுபதி பட்டையை கிளப்பி உள்ளார். முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர்.
குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக யதார்த்தமாக நடித்துள்ளனர்.
இந்தப்படத்திற்கு K.S. சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தின் படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். கலையை வீரமணி கவனித்துள்ளார்.
இந்த நிகழ்வில் அனைவரையும் வரவேற்று பேசிய தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது, “இது உண்மையிலேயே சந்தோஷமான ஒரு விழா. இயக்குநர் ராம் சங்கையா கதை சொன்ன உடனே இந்த படம் பண்ண வேண்டும் என முடிவெடுத்து விட்டேன்.
மண்வாசனை கலந்த கதை. அதில் உள்ள உண்மைத்தன்மையுடன் அவர் பார்த்து வளர்ந்த நிகழ்வுகளை கொஞ்சம் கற்பனையில் சேர்த்து புனைவு கதையாக உருவாக்கி உள்ளார். இந்த கதைக்கு நாங்கள் முதலில் நினைத்த நடிகர் பசுபதியே இந்த படத்தில் எங்களுடன் இணைந்தார்..அதேபோல் தான் ரோகிணியும் வயதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தேனியில் ஒரே கட்ட படப்பிடிப்பாக இதை நடத்தி முடித்துள்ளோம். இந்த படத்தில் நடித்துள்ள தண்டட்டி அப்பத்தாக்களால் படப்பிடிப்பே கலகலப்பாக இருந்தது. அத்தனை பேரும் இயக்குனருக்கு டப் கொடுத்தார்கள். அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.
இன்றைய சூழலில் மெதுவாக சில விஷயங்களில் இருந்து விலகி வருகிறோம். அப்படி ஒரு விஷயமான தண்டட்டி பற்றி இந்த படம் உருவாக்க வேண்டும் என நினைத்தோம் என்றார்.
இயக்குநர் ராம் சங்கையா பேசும்போது, தண்டட்டி படத்தின் ஆரம்ப புள்ளி எங்கே ஆரம்பித்தது என்று தெரியாது. ஆனால் இது ஒரு மிகப்பெரிய பயணம். பொதுவாக விநாயகரை வணங்கி வேலையை தூங்குவார்கள்.
ஆனால் எனக்கு விநாயகருக்கு பதிலாக வெங்கடாஜலபதியே கிடைத்தார் என்பது போல பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முழு காரணமாக இருந்தவர் இணை தயாரிப்பாளர் ஏ.வெங்கடேஷ் தான். இந்த கதையை கேட்டதுமே தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் உடனே ஓகே செய்தார்.
எந்த பிரச்சினை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என ஊக்கம் கொடுத்தார். எனக்கு இது ஒரே ஒரு படம் தான்.. ஆனாலும் அந்த சமயத்தில் அவர் பல படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வந்தாலும் கூட ஒவ்வொரு படத்திற்கும் என தனித்தனி கவனம் ஒதுக்கி அனைத்தையும் நினைவில் வைத்து அதுகுறித்து பேசும்போது ஆச்சரியமாக இருக்கும்.
நான் நேசிக்கும் நடிகர்களில் பசுபதியும் ஒருவர். இந்த படத்திற்கு நான் மம்முட்டி அல்லது பசுபதி என இரண்டு பேரை மட்டுமே மனதில் வைத்திருந்தேன். மம்முட்டியை பிடிக்க முடியவில்லை. ஆனால் எனக்கு பசுபதி கிடைத்து விட்டார்.
ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு விஷயத்திற்காக நடிக்க கூடியவர்கள். ஆனால் பசுபதி திரைக்கதைக்காக நடிப்பவர். கலைத்துப் போடப்பட்ட இந்த படத்தின் திரைக்கதையில் நேர்கோடான நடிப்பை அவர் வழங்கியுள்ளார். அவர் நடித்த படங்களில் மிகச்சிறந்ததாக இந்த தண்டட்டி இருக்கும் என்றார் ராம் சங்கைய்யா…!
Leave a Reply