எம்.ஜி.ஆர் – பட்டினி முதல் பாரத ரத்னா வரை

Share Button

பட்டினி முதல் பாரத ரத்னா வரை..

தந்தையில்லா குழந்தை, ஆறுவயது மட்டுமே நிரம்பிய மூத்த அண்ணன், வறுமையுடன் போராடிய தாய்…

இப்படித்தான் ஆரம்பித்தது, கோடானுகோடி மக்கள் இன்றைக்கும் பூஜை அறையில் வைத்து வணங்கும், எம்ஜிஆரின் வாழ்க்கை.

கோடீஸ்வரன் வீட்டு பிள்ளைகளுக்கு அமைவதுபோல், சீரான வாழ்க்கை அவருக்கு அமையவில்லை. அடிமேல் அடிவிழுந்து, அதன்பிறகு ஏற்றம் மேல் ஏற்றம் கண்ட வித்தியாசமான வாழ்க்கைதான் அவருடையது.

பள்ளிப்படிப்பைக்கூட தொடரவிடாத கொலைபட்டினி வாழ்க்கை, துரத்திதுரத்தி கொண்டுபோய் நிறுத்திய இடம், நாடகக்கொட்டகை.

சிறுவனாக இருந்தபோது அவரிடம் அளவுக்கு அதிகமாக தென்பட்ட விஷயங்கள், தொழிலில் அர்ப்பணிப்பும் அதையும் தாண்டிய ஆர்வமும்தான்.

அதனால்தான் நாடகத்தில் வேஷங்களைதாண்டி, வாள்வீச்சு, சிலம்பம், குஸ்தியாட்டம் என பல விஷயங்களை கற்க ஆரம்பித்தார்.

அப்போது சகலகலா வல்லவர்களாய் திகழ்ந்த காளி என். ரத்னம், கேபி கேசவன் ஆகிய இரு நடிகர்களை குருவாகக்கொண்டு கற்றுத்தேறினார்.

இங்கே கேபி கேசவனை பற்றி சொல்லியாகவேண்டும். 1936ல் எம்.கே.ராதா கதாநாயகனாக நடித்த சதிலீலாவதி படத்தில் ரங்கய்யா நாயுடு என்ற இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் அறிமுகமான எம்ஜிஆருக்கு இரண்டாவது படம் இரு சகோதரர்கள்.

இதில் கதாநாயகனாக நடித்தவர்தான் கேபி கேசவன். சென்னையில் அந்த நடிகருடன் சினிமா பார்க்க தியேட்டருக்கு எம்ஜிஆர் செல்கிறார். ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டு, கேவசனை மொய்க்கிறார்கள். உடன் இருக்கும் எம்ஜிஆரை கண்டுகொள்ள ஆளையில்லை.

பின்னாளில் கதாநாயகனாகி அதே நடிகர் கேசவனோடு சினிமா செல்கிறார். இப்போது எம்ஜிஆரை கூட்டம் மொய்க்கிறது.கேசவனை அடையாளம் தெரியாததால் அவரை யாரு கண்டுகொள்ளவில்லை.

இந்த இடத்தில் எம்ஜிஆருக்கு வந்தது, ‘’ஆஹா நாம் சாதித்துவிட்டோம்’’ என்ற கர்வம் அல்ல. இந்த நட்சத்திர புகழெல்லாம் கொஞ்ச நாளிலேயே மங்கிவிடும் என்ற கசப்பான உண்மைதான் அவருக்கு உரைத்தது.

புகழ் நிலைத்து நிற்கவேண்டுமென்றால் தனித்துவம் வேண்டும் என்ற சூட்சுமத்தை புரிந்துகொண்டார். கிடைத்தது சிறிய பாத்திரங்கள் என்றாலும் அத்தனை படங்களிலும் யார் இவர் என்று கேட்கும் அளவுக்கு தனியாகவே தெரிந்தார்.

1939-ஆண்டு வெளிவந்த பிரகலதா படத்தில் இந்திரனாக வரும் எம்ஜிஆர், பெண்ணை கடத்தவேண்டிய சீன். கணவன் இல்லாத நேரம் பார்த்து வந்த கிராதகனே என்று பெண் சொல்வார்.

பதிலுக்கு எம்ஜிஆர் ஆரம்பிப்பார்..’’ கணவன் இருக்கும்போது நான் வந்தால் அவனை கொன்றுவிட்டு அதன் பிறகு உன்னை கொண்டுபோகவேண்டும். அப்படி செய்தால், உன் மனசு என்ன பாடுபடும்? அதனால்தான் அவனில்லாத நேரத்தில் வந்தேன்’’ என்று நக்கலாக சொல்வார்.
பிரகலாதா படம் என்பது டிஆர் மகாலிங்கமே சிறுவனாக வந்து சதா பாடிக்கொண்டே இருக்கும் படம்.

தமிழ்திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் கோஷ்டியான எம்கே தியாகராஜ பாகவதர், பி.யூசின்னப்பாவுடன் நடித்தது மட்டுமல்லாது எம்எஸ் சுப்புலட்சுமிக்கு காற்றினிலே வரும் கீதம் பாடல் மூலம் பெரும் புகழ் தேடித்தந்த மீரா (1945) படத்திலும் எம்ஜிஆர் நடித்தார்.

காரணம் எம்ஜிஆரை அறிமுகப்படுத்தி தொடர்ந்து வாய்ப்பு கொடுத்துவந்த அமெரிக்கரான டைரக்டர் எல்லீஸ் ஆர், டங்கன்தான் மீராவையும் இயக்கினார்.

1940 களின் துவக்கத்தில் சபாபதி படத்தில் நடித்து புகழின் உச்சியில் இருந்த டி.ஆர்.ராமச்சந்திரனால், தன் பெயர் கரைந்துபோகுமோ என்ற எண்ணத்தில் எம்ஜி ராம்சந்தர் என டைட்டிலில் வருமாறு எம்ஜிஆர் பார்த்துக்கொண்டார். மனுஷனுக்கு எப்படியெல்லாம் சோதனை வந்திருக்கு பாருங்க..

பதினோரு ஆண்டுகளில் பதினான்கு படங்களில் தலைகாட்டிய பிறகே 1947ல் ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக முடிந்தது. அதுகூட பெரும் இழுபறிக்கு பிறகே வாய்ப்புகிடைத்து வெற்றிகரமாகவும் அமைந்தது..

படத்தயாரிப்பாளர் ஜுபிடர் சோமு, எம்ஜிஆர்தான் கதாநாயகன் என்று சொல்ல, டைரக்டர் எஸ்ஏ சாமியோ அதெல்லாம் வேண்டாம் என்று சொல்ல, எம்ஜிஆர் அடிவயிறு கலங்கிப்போய்விட்டது.
சோமு உறுதியாக இருந்ததால்தான் வயிறு சரியானது. ஏனென்றால் 1940லேயே சாயா என்ற படத்தில் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்து பாதிப்படம் தயாரான நிலையில் பங்கு தாரர்களுக்கு இடையே பயங்கரமான தகராறு. படத்தையே சுருட்டி டப்பாவுக்குள் போட்டுவிட நொந்துபோய்விட்டார்.

அந்த பீதியில் இருந்த எம்ஜிஆருக்கு, முதலில் ஊசலாட்டம் காட்டிய ராஜகுமாரி படம், ஒருவழியாக தள்ளாட்டம் காணாமல் வெளியானது.

உதவி வசனகர்த்தா என டைட்டிலில் போடப்பட்ட கலைஞரின் வசனமும் கைகொடுத்து உதவ ராஜகுமாரி சக்சஸ்..

இன்னொரு பக்கம் இரண்டாவது ஹீரோவாக ஏற்கனவே நடித்திருந்த பைத்தியக்காரன், மோகினி, ராஜமுக்தி போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தன.

மறுபடியும் கதாநாயகனாக 1950ல் மருதநாட்டு இளவரசி படத்தில் புகுந்தபிறகு, பின்னடைவே இல்லை. 1978ல் கடைசிபடமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வெளியாகும்வரை ஹீரோ என்ற அந்தஸ்த்தைவிட்டு எம்ஜிஆரின் திரைப்பயணம் இறங்கியதே கிடையாது.

மருதநாட்டு இளவரசியில் கலைஞரின் அனல்பறக்கும் வசனத்தை எம்ஜிஆர் தன் கம்பீரக்குரலால் பேசிய விதம், அடுத்த படமான மந்திரி குமாரியிலும் அதகளப்படுத்தியது.
எம்ஜிஆர் இந்த நாட்டை ஆள்வார் என்று முதன் முதலில் சொன்ன தீர்க்கதரிசி, கலைஞர்தான்.
மந்திரிகுமாரி படத்தில் தளபதி வீரமோகனாக வரும் எம்ஜிஆரை பார்த்து ராஜகுரு பாத்திரம் எகத்தாளமாக சொல்லும் வசனம்,இது.

‘’உண்டு உண்டு இந்த நாட்டை ஆளும் உரிமைகூட உனக்கு உண்டு’’ 1950ல் எம்ஜிஆரை பார்த்து பேசப்படுவதாக கலைஞர் எழுதிய வசனத்திற்கு 1977ல் உண்மையிலேயே உயிர் கிடைத்தது.
மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி என 1950-ல் இரண்டு ஹிட் படங்கள் எம்ஜிஆருக்கு.
அதன் பிறகு தனித்துவம் என்ற வித்தையை காட்ட ஆரம்பித்தார்.

1951-ல் வந்த மர்மயோகி, தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஏ சர்ட்டிபிகேட் பெற்ற படம். கவர்ச்சிக்காக அல்ல, திகில் காட்சிகளுக்காக.

தமிழ் சினிமாவில் முதன் முதலாய் பன்ச் டயலாக் பேசியவரும் எம்ஜிஆர்தான்.. மர்மயோகி படத்தில் கரிகாலன் என்ற பாத்திரத்தில் வந்து,’’ குறிவைத்தால் தவறமாட்டேன்.
தவறுமேயானல் குறிவைக்கமாட்டேன்” என்று பேசி தியேட்டரையே அதிரவிடுவார்.
அதிலும் அரசாங்கத்தால் தேடப்படும் கொள்ளையனாக இருந்து நாடளும் அரசிக்கு தன் துணிச்சலைகாட்ட அரண்மனை தர்பாருக்கே கயிற்றில் தொங்கியபடியே ஸ்டாலாக வந்திறங்குவார்.

அதைவிட ஸ்டைலோ, ஸ்டைலாக அடுத்த சீன். சபையில் அமர்ந்து பேச அரசி இடம் தராததால், நாற்காலியை அரசியை பார்த்தடிபயே எட்டி உதைப்பார்.. நாற்காலி போய்க்கொண்டே இருக்கும்.. எம்ஜிஆரும் பின்தொடர்ந்தபடியே சொல்வார்.

சரியான இடத்தில் நாற்காலி போய் நிற்கும். அப்போது அதில் அவ்வளவு தெனாவட்டாக அமருவார்.

சர்வாதிகாரி, என் தங்கை, அந்தமான்கைதி என பல படங்கள் அடுத்தடுத்து எம்ஜிஆர் நடித்து தள்ளினார்.

என் தங்கை படம் தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை பாசத்தை அவ்வளவு உருக்கமாக பேசிய படம். வறுமையான சூழலிலும் பார்வை இழந்த தங்கையை வாழவைக்க எவ்வளோ முயன்றும் உறவுக்கார சாடீஸ்ட்களிடமே தோற்றுப்போவார்..

கடைசியில் தங்கையை தூக்கிக்கொண்டு கடலில் இறங்கி வாழ்க்கையை முடித்துக்கொள்வார். எம்ஜிஆர் படமும் தியேட்டர்களில் ரசிகர்களையும் பெண்களையும் அழவைத்ததுண்டா என்று கேட்டால், அதற்கு பதில் சொல்வதற்காகவே என் தங்கை படம் அமைந்துபோனது..

என் தங்கை வெளியான அதே 1952ல் பராசக்தியில் அறிமுகம் ஆனார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தியின் மிகப்பெரிய வெற்றியால் அடுத்தடுத்து படங்கள் கிடைத்து இரண்டே வருடத்தில் எம்ஜிஆருக்கு சகபோட்டியாளராக மாறினார் சிவாஜி.

இன்னொரு பக்கம் படத்தயாரிப்பில் மெதுவாக ஆர்வம் காட்டினார் எம்ஜிஆர். ஜுபிடர் பிக்சர்சும் மேகலா பிக்சர்ஸ்சும் சேர்ந்து நாம் என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்தது.

இதில் மேகலா பிக்சர்ஸ்சில் கலைஞர் விஎன் ஜானகி, பிஎஸ் வீரப்பா, எம்ஜிஆர், டைரக்டர் காசிலிங்கம் ஆகியோர் பங்குதாரர்கள்.
நாம் படம் மிகப்பெரிய வெற்றியை தேடித்தரவில்லை.

ஆனால் எம்ஜிஆரின் நடிப்பை பேசவைத்தது. தன்னை உயிரோடு எரிக்க முயலும் சம்பவத்தில் தப்பும் குமரன் என்ற ஹீரோ பாத்திரம் , வெந்துபோன முகத்துடன் இரவில் மட்டுமே உலாவும்.
எம்ஜிஆர் கோர முக மேக்கப்பில் துவம்சம் செய்தார் என மூத்தவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். எங்கள் ஊரான காஞ்சிபுரத்தில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட ராஜா தியேட்டரில் முதல் படம் நாம்.

தமிழ்சினிமா வரலாற்றில் அபரிதமான வளர்ச்சிக்கு மிகமிக பெரிய திருப்புமுனை ஆண்டு என்றால் 1954 ஆம் ஆண்டை சொல்லலாம்.

காரணம் அந்த ஆண்டு பல படங்கள் பலரும் மைல்கல்லாக அமைந்தன. எம்ஆர் ராதாவுக்கு பெரும்புகழை தேடித்த ரத்தக்கண்ணீர் வந்தது.

எம்ஜிஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளியும் வந்ததும். டிஎம்சுக்கு தமிழ்சினிமாவில் சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் நிரந்தர பின்னணி குரலாக மாறிப்போன டிஎம்எஸ் மொத்தபாடல்களையும் பாடிய சிவாஜியின் தூக்கு தூக்கி வந்தது.

பாடல்களே இடம்பெறாத அந்த நாள் படமும் 1954ல்தான் வெளியானது
அறிமுகமாகி பதினாறு ஆண்டுகளாய் போராடிய எம்ஜிஆருக்கு மலைக்கள்ளன் என்ற படம் முதன்முதலாய் மிகப்பெரிய பிளாக் பஸ்டராக அமைந்ததும் 1954ல்தான்.

எம்ஜிஆரின் அட்டகாசமான நடிப்பையும் இருவேறு பாத்திரங்களில் அவர் வசனங்களை உச்சரித்த விதமும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. மலைக்கள்ளன் படம் தமிழகத்திற்கு முதன் முறையாக ஜனாதிபதியின் பதக்கத்தையும் பெற்றுத்தந்தது.

எல்லாவற்றையும்விட பாடகர் டிஎம்எஸ்சும் எம்ஜிஆரும் படங்களில் ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாய் இணைந்திருந்தாலும், எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என மெகா மெகா ஹிட் பாடல் பட்டிதொட்டியெல்லாம் கலக்கியது.

அவ்வளவு ஏன், 67 ஆண்டுகளாகியும் இன்றும் அந்த பாடல் ஒலிக்காத நாள் உண்டா?
மலைக்கள்ளன் தந்த மாபெரும் வெற்றி, எம்ஜிஆர்தான் இனி தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் மற்றும் வசூல் சக்கரவர்த்தி என அழுத்தந்திருத்தமாக கூறியது .அதனை அப்படியே நிரூபிக்கவும் செய்தார் எம்ஜிஆர்.

அடுத்தடுத்து வந்த குலேபகாவலி, அலிபாபாவும் நாற்பது திருடர்களும், தாய்க்குபின் தாரம், மதுரைவீரன், சக்கரவர்த்தி திருமகள் என ஒவ்வொரு படமும் 100 நாட்கள், வெள்ளிவிழா என தாறுமாறாக ஓடி வசூலை அள்ளிக் குவித்தன.

தமிழ் திரையுலக வரலாற்றில் முதன் முதலில் ஒரு கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையை படைத்தது எம்ஜிஆரின் மதுரை வீரன் படம். தென் மாவட்ட மக்களை எம்ஜிஆர் தன் பக்கம் ஈர்த்தது இந்த படத்தின் மூலம்தான்.

மதுரைவீரன், புதுமைப்பித்தன், மகாதேவி போன்ற படங்கள் கலைஞர் மற்றும் கண்ணதாசனின் வசனங்களுக்காக பெரிதும் பேசப்பட்டன.

ஒரு பக்கம் புகழ் வந்து குவிந்தாலும் இன்னொரு பக்கம் அவமானங்களையும் சந்தித்தார் எம்ஜிஆர் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் தயாரிப்பாளர் மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர்.சுந்தரத்திற்கும் எம்ஜிஆருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடைசியில் இந்த மோதல் எம் ஜி ஆரின் படத்தையோ பெயரையோ போடாமல் வெறும் பானுமதியை மட்டுமே பிரதானப்படுத்தி அலிபாபாவும் 40 திருடர்களும் ரிலீஸ் விளம்பரம் பத்திரிகைகளில் வெளியாகும் அளவுக்கு போனது.

படத்தின் ஹீரோவின் பெயரே இல்லாமல் வெளியான முதல் விளம்பரம், அதுவாகக்கூட இருக்கலாம்.. இப்படி நொந்துபோனதால்தான், இனி பெரிய கம்பெனிகளில் நடிப்பதில்லை என்று எம்ஜிஆர் தீர்மானித்தார்.

தொடர்ந்து வெற்றிப் படங்கள் அமைந்து பொருளாதார ஏற்றம் பெற்ற நிலையில், தனது கனவுப்படமான நாடோடி மன்னன் படத்தை தொடங்கினார்..

தமிழில் பிரம்மாண்டமான படங்களுக்கு பெயர் பெற்ற ஜெமினி நிறுவனத்திற்கு நிகராக நாடோடி மன்னனை உருவாக்கினார்.

தன்னிடமிருந்த பணம் போக, வேண்டப்பட்ட இடங்களிலெல்லாம் கைநீட்டி கடன் வாங்கி இந்த படத்தை எடுத்தார்.

நடிப்பு இயக்கம் தயாரிப்பு என மூன்றையும் தன் தலைமீது சுமந்து கொண்டார்.. படப்பிடிப்பு நடந்த நாட்களில் எம் ஜி ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பணம் தண்ணீராக பாய்ந்தது..

மூன்று கதாநாயகிகள், ஏகப்பட்ட பாத்திரங்கள், பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் மற்றும் பாடலாசிரியர்கள், ஏகப்பட்ட அரங்க அமைப்புகள்..

பிரமாண்டம் என்ற பெயரில் என்ன செய்வதென்றே தெரியாமல் எம்ஜிஆர் பைத்தியக்காரத்தனமாக படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று பலரும் விமர்சித்தனர். அவ்வளவு ஏன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட பானுமதி போன்ற நடிகைகளுக்கும்கூட அந்த எண்ணம் தலைதூக்கியது.

எதிர்பட்ட விமர்சனங்களுக்கெல்லாம் எம்ஜிஆர் தந்த ஒரே பதில், ‘இந்த படம் ஓடினால் நான் மன்னன் இல்லையென்றால் நாடோடி’
1958 ஆகஸ்ட் 22ம் தேதி வெளியானது நாடோடிமன்னன். மூன்றே முக்கால் மணி நேரம் ஓடும் படத்தில், சரோஜாதேவி தோன்றும் கடைசி ஒன்றேகால் மணி நேரம் முழுவதும் வண்ணப்படம்.
ஒரு ஆணும் பெண்ணும் திமுக கொடியை தாங்கியபடி எம் ஜி ஆர் பிக்சர்ஸ் இலச்சினை திரையில் தோன்றியது. தானிருந்த கட்சியின் கொடியையே படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு வைத்த முதல் ஆள் எம்ஜிஆர் தான்.. அதுவும் எப்போது? வசூல் சக்ரவர்த்தியாக மாறி பல வெற்றி படங்களை கொடுத்த பிறகு.

அண்ணா போன்ற தலைவர்கள் தி மு க மேடையில் பேசுவதற்கு நிகராக நாடோடி மன்னன் திரைப்படம், ஒவ்வொரு திரையரங்குகளிலும் தினந்தோறு பல காட்சிகளாக பாமர மக்களிடம் திராவிட இயக்க அரசியலை பேசியது.

படத்தில் நாடோடியாக வரும் வீராங்கன் பாத்திரத்தை அப்படி அண்ணாவை மனதில் வைத்து உருவாக்கி படம் முழுக்க ஓடவிட்டிருந்தார் எம்ஜிஆர்.. மன்னராட்சியை எதிர்த்தும் மக்கள் ஆட்சியை எதிர்பார்த்தும், வீராங்கன் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வசனமும், காங்கிரஸ் ஆட்சியை சீண்டிப்பார்க்கும். அறிஞர் அண்ணாவின் பேச்சை அப்படியே பிரதிபலித்தன.
அரசியல் தத்துவம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமை தீண்டாமை என பல பக்கங்களை அலசிய நாடோடி மன்னன் படத்தில் எல்லாவற்றிற்கு மேலாக தன் தனித்தன்மையை ஒரே வசனத்தின் மூலம் நிலைநிறுத்தி தியேட்டரையே அதிரவைத்தவர் எம்ஜிஆர்..

‘’என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர, நம்பிக்கெட்டவர்கள் இன்று வரை இல்லை’’ ,சாகா வரம் பெற்றது அவரின் இந்த வசனம்..

நடிகர், தயாரிப்பாளர், டைரக்டர் என்ற மூவரையும் தாண்டி, நாடோடி மன்னனில் படு கில்லாடி எம்ஜிஆர் ஒருவர் வெளியே தெரியாமல் இருந்தார்.

இந்த கில்லாடி எம்ஜிஆர், அரசியல் தலைவர் எம்ஜிஆருக்குள்ளும் விஸ்வரூபம் எடுத்தததால்தான் அவரை அரசியலில் எதிரிகள் கடைசிவரை சமாளிக்கமுடியவில்லை..
எதற்காக இவ்வளவு பேசவேண்டியுள்ளது என்றால், நாடோடி மன்னன் படத்தில்தான் எம்ஜிஆருக்கு எதிர்கால திட்டமிடல் என்கிற யோசனை தோன்றியிருக்கவேண்டும். சினிமாவில் மற்றவர்களின் ஆளுமைகளோடு தன் ஆளுமை சமமாகவோ, அல்லது அதற்கும் கீழாகவோ போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்..

நாடோடி மன்னன் படம் தயாரான காலகட்டத்தில் திமுகவில் நிறைய திரைப்பட கலைஞர்கள் இருந்தனர். வசனத்தில் கலைஞர் என்றால் நடிப்பில் கே.ஆர் ராமசாமி, எஸ்எஸ் ராஜேந்திரன் என ஒரு பெரிய பட்டியல் உண்டு.

இந்த இடத்தில்தான் எம்ஜிஆரின் காய் நகர்த்தல்கள் முற்றிலும் விநோதமாக இருந்தன. வசனகர்த்தா ஜாம்பவான் கலைஞர் நாடோடி மன்னனில் இடம் பெறவில்லை. பெரும் பொருட்செலவில் தயாராகும் தனது கனவுப் படத்திற்கு கலைஞரை வசனம் எழுதவிட்டால், அவர் அதை அவரின் டிரேட்மார்க் படமாக கடத்திச் சென்று விடுவார் என்ற எச்சரிக்கை உணர்வு..
படத்தில் உருவ ஒற்றுமையால் மன்னன்போல ஆட்சிக்கு வந்து ஒரு நாடோடி அறிவிக்கும் புரட்சிகரமான பட்ஜெட் காட்சிகள் முழுக்க முழுக்க தன் சிந்தனைகளாகவே தெரியவேண்டும் என்பதில் எம்ஜிஆர் தீர்மானமாக இருந்தார். அவை கலைஞரின் சிந்தனைகள் என்று பேச்சு வந்துவிடக்கூடாது என்பதே அவரின் மனஓட்டம்..

கலைஞருக்கு பதில் கண்ணதாசனை வசனம் எழுத அழைத்தார். மிகமிக முக்கியமான பதினைந்து காட்சிகளுக்கு மட்டுமே கண்ணதாசன் எழுதினார். மற்ற வசனங்களை எழுதியவர், எம்ஜிஆர் பிக்சர்ஸ்சை சேர்ந்த ரவீந்தர்.

தமிழ் திரை உலகின் நெம்பர் என் வசனகர்த்தாவான இளங்கோவனிடம் உதவியாளராக இருந்தவர். அதாவது நாடோடிமன்னன் படம் வசனம் என்றால் டைட்டிலில் கண்ணதாசன்- ரவீந்தர் என்றே வரும்.

இன்னொரு வியப்பான விஷயம். படத்தில் கண்ணதாசன் பாட்டெழுதவில்லை. வேறு எட்டு பேர் எழுதினார்கள். எல்லாம் ஹிட் பாடல்கள். ஆனாலும் தூங்காதே தம்பி தூங்காதே, காடு வெளஞ்சென்ன மச்சான் போன்ற பாடல்களால் ஒற்றை ஆளாய் பாடலாசிரியர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் மட்டுமே பேசப்பட்டார்..

நாடோடி வீராங்கன், மன்னன் மார்த்தாண்டன், ராஜகுரு, தளபதி பிங்களன், அரசியல் ஆலோசகர் கார்மேகம், அமைச்சர்கள், புரட்சிகூட்டத்தினர் என நிறைய பாத்திரங்கள் உண்டு. ஆனால் இவற்றில் எதையும் திராவிட இயக்க நடிகர்களான எஸ்எஸ்ஆர், கே.ஆர் ராமசாமி எம்ஆர் ராதா, சகஸ்ஹரநமம் போன்றவர்களுக்குக்கூட கொடுக்கவில்லை…

நாடோடி மன்னன் படம் என்றாலே எங்கும் எம்ஜிஆர் எதிலும் எம்ஜிஆர் என்ற பெயர் மட்டுமே பேசும்படி பார்த்துக்கொண்டார்.. அதுதான் வெளியில் தெரியாத கில்லாடி எம்ஜிஆர்.
நாடோடி மன்னனுக்கு அப்போது விமர்சனம் எழுதிய பல பத்திரிகைகளும் “படம் முழுக்க திரும்பிய திக்கெல்லாம் எம்ஜிஆர். ஆனால் சலிப்பே வரவில்லை” என்று கொண்டாடின.
திமுகவின் கொள்கைகளை எம்ஜிஆர் தன் படத்தில் தனி ஆளாய் திறம்பட பேசியிருக்கிறார் என்று அறிஞர் அண்ணாவே நினைக்கும் அளவுக்கு கட்டமைத்தார் எம்ஜிஆர்.

கறுப்பு சிவப்பு கொடியையும் திமுகவையும் நாடோடி மன்னன் படம் மூலம் தமிழக மக்கள் மத்தியில் எம்ஜிஆர் புகுந்திய விதத்தை தனி புத்தகமாகவே எழுதலாம்.

நாடோடி மன்னன் வெளியாகி எம்ஜிஆரை நாடோடியாக ஆக்கவில்லை. மன்னனாகவும் ஆக்கவில்லை. மன்னனுக்கும் மேலாக திரையலக சக்ரவர்த்தியாகவே ஆக்கியது..

திரையிட்ட இடங்களிலெல்லாம் 100 நாட்களையும் மாநகரங்களில் எல்லாம் வெள்ளி விழாக்களையும் கண்டது. அதற்கு முன்பு தமிழ் திரை உலக வரலாற்றில் ஒரு திரைப்படம் அந்த அளவுக்கு வெள்ளி விழாவை ஒரேசேர பல இடங்களில் குவித்ததில்லை.

புகழ் மற்றும் வசூலில் உச்சத்திற்கு போன எம்ஜிஆருக்கு கூடவே வந்தது மாபெரும் சோதனை.
நாடகத்தில் நடிக்கும்போது ஸ்டண்ட் காட்சியில் கால் முறிந்தது. இனியே அவரால் நடக்கவே முடியாது என்று பலரும் முடிவே செய்துவிட்டார்கள்.

எம்ஜிஆர் நடித்துக்கொண்டிருந்த பல படங்கள் கால்வாசி, அரைவாசியாக நின்றன.அவற்றின் கதையும் அம்பேல் என்றனர். மொத்தத்தில் எம்ஜிஆர் என்று சகாப்தம் குறுகிய காலத்தில் முடிநதுபோனது என்பதே பலரின் தீர்மானமாக இருந்தது.

அந்த நேரம் பார்த்து நாடோடி மன்னனுக்கு அடுத்து அறிஞர் அண்ணாவின் கைவண்ணத்தில் எம்ஜிஆர் நடித்து வெளிவந்த, தாய் மகளுக்கு கட்டிய தாலி என்ற படம் தோல்வியை சந்தித்தது.
திரை உலகினர் மட்டுமல்ல திராவிட இயக்க தலைவர்களும் அதிர்ந்து போயினர்.. ஆனால் நாடோடி மன்னன் என்ற படத்தை கொடுத்த டெக்னீஷியன் எம்ஜிஆர் அதிர்ச்சி அடையவும் இல்ல, அசரவும் இல்லை.

உடல் தேறியதும் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்த அரச கதை படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.. ராஜாதேசிங்கு விக்ரமாதித்தன் அரசிளங்குமரி, ராணி சம்யுக்தா, பாக்தாத் திருடன் போன்ற படங்கள் தான் அவை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கிய இவை வெளிவந்தபோது, பெரிய அளவில் எம்ஜிஆருக்கு வெற்றியை தேடித் தரவில்லை.

ஒரு டெக்னீசியன் ஆகவும் டைரக்டசனும் தெரிந்த அவர், காட்சியமைப்புகளில் தெரிவித்த யோசனைகளை தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ஏற்றுக் கொள்ளாததும் இதற்கு ஒரு காரணம்.

மாஸ் ஹிட்டை கொடுத்த மதுரை வீரன் தயாரிப்பு நிறுவனமான கிருஷ்ணா பிக்சர்சின் ராஜா தேசிங்கு படம், எம்ஜிஆரின் யோசனைகளை கேட்கத்தயாராக இல்லாத டைரக்டரின் வீம்புக்காக போய் இப்படித்தான் தோல்வியை தழுவியது.

இப்படிப்பட்ட சூழலில் அரச கதைகளில் இருந்து விடுபட்டு சமூகப் படங்களில் நடிக்க பெரிதும் ஆர்வம் காட்டினார்.. மன்னனாகவும் தளபதியாகவும் வாளை சுழற்றிய எம்ஜிஆர் மார்டனாக பேண்ட் ஷர்ட் கிராப் தலை என தோற்றத்தையே அடியோடு மாற்றி கொண்டார்.

1961 இல் வெளியான திருடாதே என்கிற சமூகப் படம் இப்படித்தான் எம்ஜிஆருக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.. திருடாதே பாப்பா திருடாதா என்ற காலத்தால் அழிக்க முடியாத பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடலை சுமந்திருந்தது படம் அது.

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா போன்ற பாடல்கள் மூலம் எம்ஜிஆருக்கு கொள்கை பாடல்களால் சிம்மாசனம் ஏற்படுத்தித் தந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், இளவயதிலேயே அகால மரணமடைந்து விட்டது எம்ஜிஆரை பொறுத்தவரை பெரிய இழப்பு.

பின்னாளில் முதலமைச்சரானபோது எம்ஜிஆர் சொன்னார், “நான் அமர்ந்திருக்கும் நாற்காலியில் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்கு சொந்தமானது” என்று..
1960களின் தொடக்கத்தில் எம்ஜிஆரின் திரைஉலகப் பயணம் புதிய பரிமாணத்தில் பறக்க ஆரம்பித்தது. தாய்க்குப்பின் தாரம் படத்தோடு கோபித்துக்கொண்டு போன உயிர் நண்பனும் திரைப்பட தயாரிப்பாளருமான சாண்டோ சின்னப்பா தேவர் மீண்டும் திரையில் கூட்டணிக்கு கைகோர்த்தார்.

தாய் சொல்லை தட்டாதே என்ற படம் மிகக் குறைந்த காலத்தில் உருவாகி வெளிவந்து சக்கை போடு போட்டது.

பேண்ட் ஷர்ட் கூலிங் கிளாஸ் தொப்பி என படு ஸ்டைலாக சிஐடி ஆபீஸராக வந்த எம்ஜிஆர், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

எம்ஜிஆரை வைத்து பூஜை போட்ட அன்றே படத்தை தேதியை வெளியிட்ட தேவர், சொன்னபடி அதே தேதிக்கு படத்தை ரிலீஸ் செய்தார். அப்போதைக்கு அது அதிசயமோ அதிசயம்.

மிகப் பெரிய கம்பெனிகளில் நடிப்பதையும் பிரமாண்ட தயாரிப்புகளையும் எம்ஜிஆர் தவிர்த்தார். சின்னப்பா தேவர் போன்ற சாமானிய தயாரிப்பாளர்களையே அதிகம் ஊக்குவித்தார்
பீம்சிங் இயக்கத்தில் நடிகர் திலகம் பாகப்பிரிவினை பாவமன்னிப்பு, பாசமலர் பாலும்பழமும், பார் மகளே பார் என ‘’பா’’ வரிசையில் ஹிட் கொடுத்ததுபோல எம்ஜிஆர் தேவரோடு இணைந்து ‘த’’ வரிசையை ஆரம்பித்தார்.

தாய்ச்சொல்லை தட்டாதே, தாயைக்காத்த தனயன், தர்மம் தலைகாக்கும், என்று ஹிட்டடித்தார். .எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து விநியோகஸ்தர்கள் மத்தியில் மினிமம் கியாரண்டி ராமச்சந்திரன் என்ற அர்த்தத்தில் பேசப்பட்டது.

இன்னொரு பக்கம் திமுகவில் பிரச்சார பீரங்கியாக திகழ்ந்தார் எம்ஜிஆர். 1962ல் நடிகர் எஸ் எஸ்ஆருக்கு சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கிய அண்ணா, எம்ஜிஆரிடம் வேறுவிதமாக வேண்டுகோள் வைத்தார்.

ஒரு தொகுதிகுள் முடங்காமல் மாநிலம் முழுவதும் உன் பிரச்சாரம் மிகவும் அவசியம் என்றார். தலைவன் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு செய்தார் எம்ஜிஆர்.

பல்லாண்டுகாலம் நோய்வாய் பட்டு படுக்கையிலேயே கிடந்த அவரது இரண்டாவது மனைவி சதானந்தவதி உடல் நிலைமோசமாகி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கட்டம்.

அந்த நிலையிலும் திமுக வேட்பாளர்களுக்காக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்தார் எம்ஜிஆர்.

பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது யாராவது துண்டு சீட்டுடன் வந்தால், மனைவி தொடர்பாக எதிர்மறை தகவலாக இருக்கக்கூடாதே என்று எம்ஜிஆர் மனதில் அடிக்கடி பதற்றம் தொற்றிக்கொள்ளும் கொடுமையான சூழல்.

“பெரிய பஸ் முதலாளியை எதிர்த்து நிற்பதால் காஞ்சிபுரம் தொகுதியில் உங்களுக்கு சிக்கலாமே, நானும் வந்து ஒரு நாள் முழுக்க பிரச்சாரம் செய்து உதவட்டுமா?” என்று எம்ஜிஆர் கேட்டதற்கு அண்ணா சொன்ன பதில், “அதெல்லாம் தேவையில்லை. மற்ற தொகுதிகளில் கவனம் செலுத்துங்கள்” என்பதுதான்.

1957 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் 15 பேர் வெற்றிபெற்றார்கள் என்ற கட்டத்தைதாண்டி, 1962 தேர்தலில் அது 50 ஆக உயர்ந்தது.

இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால். மறுபடியும் போட்டியிட்டிருந்த 15 பேரில் கலைஞர் ஒருவர் மட்டுமே வெற்றிபெற்றார்,
அண்ணா உட்பட 14 பேரும் தோற்றுப்போனார்கள்.

இந்தியாவிலேயே சட்டமன்றத்திற்கு தேர்தெடுக்கப்பட்ட முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றார் தேனியில் வெற்றிபெற்ற இலட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர் எனப்படும் எஸ்எஸ் ராஜேந்திரன்.

தேர்தலில் தோற்ற அண்ணா, நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு எம்பியாகி டெல்லிக்குப்போனார். எம்ஜிஆர் சட்ட மேலவைக்கு அதாவது எம்எல்சி ஆக்கப்பட்டு அங்கே கால்பதிக்கவைக்கப்பட்டார்.

ஒரே நேரத்தில் சினிமாவிலும் அரசியலிலும் இவ்வளவு களேபரங்களையும் பரபரப்புகளையும் சந்தித்துக்கொண்டிந்தார் எம்ஜிஆர். இவற்றில் அவரின் இரண்டாவது மனைவியின் மரணமும் அடங்கும்.

ஏற்கனவே வறுமையோடு போராடியபோது முதல் மனைவி தங்கமணியை சரியாக பார்த்துக்கொள்ளமுடியவில்லை எம்ஜிஆரால்.

இருமுறை கருத்தரித்தும் எம்ஜிஆரின் வாரிசு தங்கமணியின் வயிற்றிலேயே சிதைத்துபோனது. அவரும் 1942ல் காலமாகிப்போய் எம்ஜிஆரை தவிக்கவிட்டார்.

1962ல் சதானந்தவதியும் போய்விட, வாழ்க்கை துணையாக விஎன் ஜானகியை சட்டபூர்வமாய் மனைவியாக்கிக்கொண்டார் எம்ஜிஆர். இதனை முன்னின்று மணமக்களாக்கி நடத்திவைத்தவர் சின்னப்பா தேவர் அவர்கள்.

© Kanchi Ezhumalai Venkatesan Ezhumalai Venkatesan
தேவரைப் போலவே ஆர் ஆர் பிக்சர்ஸ் உரிமையாளரும் இயக்குநருமான டி ஆர் ராமண்ணாவும், எம்ஜிஆரின் மனம் கவர்ந்த ஒருவர்..

1963-இல் டி ஆர் ராமண்ணா தயாரித்து இயக்கிய, பெரிய இடத்துப் பெண் மெகா பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. பணக்கார பெண்ணின் திமிரை வேறுவேடத்தில் வந்து கதாநாயகன் அடக்கும் பக்கா கமர்சியல் மசாலா கதை.. பட்டிக்காடா பட்டணமா, சகலகலாவல்லவன் போன்ற படங்களுக்கெல்லாம் இதுதான் ட்ரெண்ட் செட்டர்..

1963-ல்தான் எம்ஜிஆருடன் நாகேஷ் காமடியான இணைந்து நடித்த பணத்தோட்டம் போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்தன. அது முதல் நாகேஷை தன் படங்களில் தவறாமல் இருக்கும்படி பார்த்துக் கொண்டார் எம்ஜிஆர்..

ஏற்கனவே நம்பியார் அசோகன் எம்.ஆர். ராதா ஆகிய மூவர் எம்ஜிஆரின் படங்களில் முக்கிய பாத்திரங்களில் வலம் வந்தனர்..

பத்மினி, பானுமதிக்கு பிறகு ஆஸ்தான கதாநாயகியாக சரோஜாதேவி வலம்வந்தார். இடையே மகாதேவிக்கு பிறகு நடிகர் திலகம் சாவித்திரி இரண்டு படங்களிலும் தேவிகா ஒரே ஒரு படத்திலும் ஜோடி போட்டுவிட்டு போய்விட்டார்கள்.

தொட்டதெல்லாம் துலங்கி ஏறுமுகத்தில் இருந்தார் எம்ஜிஆர். அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட சிவாஜியின் பிரமாண்ட படமான கர்ணனை, பொருட்செலவே இல்லாத வேட்டைக்காரன் என்ற கறுப்பு வெள்ளை படத்தை முன்னிறுத்தி வெற்றி காணும் அளவுக்கு இருந்தார் எம்ஜிஆர்.

இதே காலகட்டத்தில் எம்ஜிஆருக்கு இன்னொரு பலம் கிடைத்தது, அவர்தான் காவியக்கவிஞர் வாலி.

கவியரசு கண்ணதாசன் கொடிகட்டிப்பறந்தாலும் அவருக்கும் எம்ஜிஆருக்கும் இடையே அடிக்கடி உரசல் ஏற்பட்டுக்கொண்டிருந்த தருணம் அது.

தனக்கென ஒரு கவிஞன், தன் மன ஓட்டத்தை நன்றாக பரிந்துகொள்ளும் கவிஞன், தன்னை மக்களின் தலைவனாக பாட்டில் வடிவமைத்துத் தரும் கவிஞனை தேடிக்கொண்டிருந்தபோதுதான் வாலி கிடைத்தார், எம்ஜிஆர் கையில்.

தெய்வத்தாய் படத்தில் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும் என்று எம்ஜிஆருக்கு கச்சிதமாய் பொருந்துகிற மாதிரி பாட்டுசட்டை தயாரித்தார் வாலி..

எம்ஜிஆரின் முதல் ஈஸ்ட்மென் கலர் படமான படகோட்டியில் அனைத்து பாடல்களையும் எழுதினார் அதே வாலி.. கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்? தரை மேல் பிறக்கவைத்தான்
எங்களை தண்ணீரில் மிதக்கவைத்தான்…

தத்துவத்தையும் கொள்கையையும் ஒருசேரக்கலந்து பிழிந்துகொடுத்த வாலி, தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்.. என்று இலக்கிய நயத்தோடு காதல் ரசத்தையும் படகோட்டி என்ற ஒரே படத்தில் கொட்டி வியப்பின் உச்சிக்கே கொண்டுபோனார் வாலி.

அவரின் பிரமாண்ட அடுத்த கொள்கை அஸ்திரப்பாடல், நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார் என்று சாட்டையை சுழட்டியபடி எம்ஜஆர் பாடும் எங்கவீட்டுப்பிள்ளை படப் பாடல்.

தனது பெரிய கட கம்பெனி தவிர்ப்பு கொள்கையை தளர்த்திக்கொண்டு நாகிரெட்டியின் விஜயா வாகினி நிறுவனத்திற்காக எம்ஜிஆர் நடித்துக்கொடுத்த படம்தான் எங்க வீட்டு பிள்ளை.

நாடோடி மன்னனுக்கு பிறகு எம்ஜிஆருக்கு பிளாக் பிளாக் பஸ்டர் படம் என்றால் அது எங்கவீட்டு பிள்ளைதான். அனைத்து அம்சங்களையும் கொண்ட பொழுதுபோக்கு படமென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லி பாராட்டாதவர்களே கிடையாது.

எல்லாவற்றையும்விட தமிழ் திரையுலகம் அப்படியொரு வசூலை அதற்குமுன் கண்டதே கிடையாது. பாதாள பைரவி, மாயாபஜார் போன்ற பிரமாண்டங்களையெல்லாம் கொடுத்த ஆனானப்பட்ட நாகிரெட்டியே எங்க வீட்டு பிள்ளை கொட்டிய பணத்தில் இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

விஜயா வாகினியின் எங்க வீட்டுப்பிள்ளை, ஏவிஎம்மின் அன்பே வா, ஜெமினி நிறுவனத்தின் ஒளிவிளக்கு.. மூன்று பெரிய நிறுவனங்களின் முதல் கலர் படத்திலும் எம்ஜிஆர்தான் கதாநாயகன்..

1965ல் எங்க வீட்டுப்பிள்ளையை தொடர்ந்து ஜெயலலிதா முதன் முறையாக வந்து சேர்ந்த ஆயிரத்தில் ஒருவன். இன்னொரு பிளாக் பஸ்டர் கம் எவர் கிரீன் காவியம். மறு ஆண்டில் அன்பே வா.. திரையிட்ட இடங்களிலெல்லாம் இப்போதைய பாஷையில் சொன்னால், தாறுமாறு தக்காளி சோறு.. அவ்வளவுதான்.

ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா போன்ற படங்களை பற்றியெல்லாம் சொல்லித்தான் தெரியவேண்டுமா?

1966 இப்படி முடிந்த நிலையில்தான் 1967 ஆண்டு ஜனவரி மாதம் வந்தது. கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவமாய் 12ந்தேதி நடிகவேள் எம்ஆர் ராதாவால் சுடப்பட்டார். பொங்கல் பண்டிக்கைக்கு இடையில் ஒரே நாள் இருந்த நிலையில் எம்ஜிஆர். குண்டுகள் பாய்ந்து, மரணத்தோடு போராட்டம்,
அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி, ரசிகர்கள் கதறல், தமிழ்நாடே ஸ்தம்பித்துபோனது.

இன்னும் சொல்லப்போனால் இதற்குப் பிறகுதான் எம்ஜிஆர் சந்தித்த சோதனைகளும் சாதித்த சாதனைகளும் உலகமே பார்த்து வியந்தவை.

 

 

 

 

 

– Ezhumalai venkatesan

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *