முதலில் பகுதி நேரமாக அரசியல் பயிற்சி வகுப்புகள் நடத்தச் சொல்லி பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்!

சென்னை :-
வெற்றிபெற்ற சட்ட மன்ற உறுப்பினர்கள், பதவி தரப்பட்ட அமைச்சர்கள்வரை 90 சதவிகிதம் புதியவர்கள் முதல்வர் உள்பட.
முதலில் பகுதி நேரமாக அரசியல் பயிற்சி வகுப்புகள் நடத்தச் சொல்லி பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். இதில் வெட்கப்பட எதுவும் இல்லை.
காவல்துறையில், தேர்வு செய்யப்பட்டதுமே நேராக ஸ்டேஷனுக்கு அனுப்பிவிடுகிறார்களா என்ன? பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டு பலவிதமான பயிற்சிகள் அளித்து பிறகுதான் போஸ்ட்டிங்!

ஒரு சட்ட மன்ற உறுப்பினரின் அதிகார எல்லைகள் என்ன, செய்ய வேண்டிய கடமைகள் என்ன, யாரை நம் இடத்திற்கு அழைத்துப் பேசலாம், யாரிடம் நாம் போய் பேச வேண்டும், ஊடக சந்திப்புகளில் எப்படிப் பேச வேண்டும், உடல் மொழி எப்படி இருக்க வேண்டும் என்று நூறு விஷயங்கள் இருக்கின்றன.
தன் துறை எதுவென்றே அறியாத குழப்பத்தில் ஒருவர். பெண் குழந்தை மரணம் பற்றிக் கேட்டால் அது பொலிட்டிகல் கேள்வி என்கிறார் ஒருவர்.
முதல்வர் எப்போது ஊடகங்களைச் சந்திப்பார் என்கிற கேள்விக்கு கோணார் நோட்ஸ் போட வேண்டிய அளவிற்கு பதில் சொல்கிறார் ஒருவர்.
நீலாம்பரி போல பெரிய சோபாவில் அமர்ந்து அமர்த்தலாகப் பேசுகிறார் ஒருவர்.
தனக்கு தன் துறை பற்றி இன்னும் முழுமையாகத் தெரியாது என்கிறார் ஒருவர்.
முதல்வரே இன்னும் ஊடகங்களைச் சந்திக்காத போது, மற்றவர்கள் மைக் முன்னால் உளறிக் கொட்டுவது தனி நபர் மரியாதையை மட்டுமல்ல… தேர்வு செய்தவர் மரியாதையையும் சேர்த்துப் பாதிக்கும்.
ஆறு மாதம் புதிய அரசை விமரிசிக்கக் கூடாது என்று சிலர் சொல்வது போல, முழுமையாக தகவலறிவு பெற்று, சரியான தரவுகளுடன் தைரியமாக ஊடகங்களைச் சந்திக்கத் தயாராகும் வரைக்கும் ஊடகங்களைச் சந்தித்து அவற்றுக்கு தீனி போடாமல் இருப்பது நல்லது.
– பட்டுக்கோட்டை பிரபாகர்












Leave a Reply