பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்த ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி அதிகாரியிடம், கோவை எஸ்.பி., பாண்டியராஜன் ஒப்படைத்தார்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 பேரையும் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளது. சிபிசிஐடி ஐ.ஜி ஸ்ரீதர் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, பொதுமக்கள் ஆவணங்களை தரலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் சிபிசிஐடி எஸ்.பி. நிஷா மற்றும் பார்த்திபன் தலைமையில் வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவித்த அவர், இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள 4 பேரையும் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறினார்.
இந்நிலையில் பாலியல் வழக்கில் தொடர்புடைய அதிமுக முன்னாள் பிரமுகர் நாகராஜுக்கு சொந்தமான மதுபான பார் அடித்து நொறுக்கப்பட்டது, சூலேஸ்வரன்பட்டியில் உள்ள பாரை பொதுமக்கள் அடித்து சூறையாடினர்.
மேலும் இவ்வழக்கில் பல திடுக்கிடும் திருப்பங்கள் வெளிவரலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. நகரின் முக்கிய பகுதிகள், கல்லூரி, பார் நாகராஜ் வீடு உள்ளிட்ட இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பதற்றத்தை தணிப்பதற்காகவும் கிட்டத்தட்ட 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Leave a Reply