மக்களவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு மதுரை வருகிறார்.
இதற்காக கொச்சியில் இருந்து பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு விமானம் மூலம் இன்று இரவு 9 மணிக்கு மதுரை வருகிறார். பசுமலையில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்கும் அவர், நாளை காலை ஹெலிகாப்டர் மூலம் 11மணிக்கு தேனி செல்கிறார்.
அங்கு ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் (தேனி வேட்பாளர்) மற்றும் மதுரை வேட்பாளர் ராஜ்சத்யன், திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதி முத்து ஆகியோரை ஆதரித்து மோடி பிரச்சாரம் செய்கிறார். இந்த பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இதன் பின்னர் மோடி, ராமநாதபுரம் செல்கிறார். அங்கு சிவகங்கை பாஜக வேட்பாளர் எச்.ராஜா, ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை வரும் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் நான்கு இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இன்று காலை கிருஷ்ணகிரியில் பிரச்சாரம் செய்யும் அவர் அதன் பின்னர் சேலத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பிற்பகல் 3.30 மணி அளவில் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தேனி செல்லும் ராகுல் காந்தி அங்கு காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
அதன்பின்னர் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் மதுரை செல்லும் ராகுல் காந்தி, மண்டேலா நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.இதில் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். பின்னர் மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.












Leave a Reply