பாதுகாப்புச் சட்டங்கள் தேவைதான் ஆனால்….?

Share Button

பாதுகாப்புச் சட்டங்கள் தேவைதான் ஆனால்….?

(மருத்துவர் ஆசிரியர் யார் என்றாலும்)

நேற்று அப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று தெரியாமல் அதிகாலை எழுந்து மாணவர்களுக்கு ஆர்வமாய் கற்பிப்பதற்கு புறப்பட்டு இருப்பாள் ஆசிரியை ரமணி…

அதேபோல் ஒரு விடியல் தான் மதனுக்கும் நிகழ்ந்திருக்கும் ஆனால் நேற்றைய நாள் இவ்வளவு பெரிய துக்க நாளாக இருக்கும் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டோம்.

ஒருதலை காதலால் ஆசிரியை குத்தப்பட்டிருக்கிறார் என்று தகவல் நேற்றைய புலனகுழுவில் வந்ததும் நொடிந்துவிட்டேன்…

காதல் செய்வதும் காதலிக்கப்படுவதும் காலம் காலமாக நடந்து வரும் நிகழ்வுதான்.

பெற்றோரின் வற்புறுத்தலாலும் மிரட்டலாலும் இருவருக்கு யாருக்கேனும் பிடிக்காமலும் காதலன் காதலி பிரேக் அப் ஆன கதைகள் இங்கே பல உண்டு.

அது ஏன் காதலித்து திருமணம் செய்து 30 வருடங்கள் வாழ்ந்த பிரேக்கப் ஆன காதல் கதையும் இங்கே உண்டு.

காதலனுக்கும் காதலிக்கோ பிடிக்கவில்லை என்றால் பிரிந்து போகலாம்…

இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதை விட அவனோ, அவளோ ஒருதலை காதல் கொள்ளும் போது உள்ள அன்பு அதிகமாக இருக்கும்.

அனைவருக்கும் தெரிந்ததுதான் : அதீத அன்பு வைத்த, காதல் செய்த மதன் கத்தியால் குத்தும் அளவிற்கு சென்றிருக்கிறான் என்றால் இங்கே நாம் ஒன்றை யோசித்தாக வேண்டும்.

70 – 80 களில் உள்ள காதல் இரண்டாயிரத்திற்கு அப்புறமான காதல் இந்த உணர்வுகள் எல்லாம் இன்று தலைகீழாக இருக்கிறது. காரணம் தகவல் தொழில் நுட்பங்களின் அதீத வளர்ச்சி கூட இருக்கலாம்…

சிறிய ஏமாற்றங்களை கூட இன்று எதிர்கொள்ள இயலாமல் இளைஞர்கள் தவிப்பது இன்றைய காலகட்டங்களில் அதிகமாகி வருகிறது.

அதனால்தான் மதிப்பெண் குறைந்துவிட்டால் தற்கொலை, அப்பா திட்டினாள் தற்கொலை, ஆசிரியர் திட்டினார் தற்கொலை, ஏமாற்றினால் தற்கொலை, ஏமாற்றப்பட்டால் தற்கொலை என்று தன்னையே சிதைத்துக்கொள்ளும் இந்த காலத்தில் கொடூரமாக இந்த எதிர்பாலை கொலை செய்யும் குணமும் அரங்கேறி இருக்கிறது என்றால் ஏதோ ஒரு மாற்றம் இளைஞர்களுக்குள் மனிதர்களுக்குள் நடக்கிறது அல்லவா!?

மருத்துவரை கொன்றால் மருத்துவர் பாதுகாப்புச் சட்டம், ஆசிரியரை கொன்றால் ஆசிரியர் பாதுகாப்பு சட்டம் இல்லையா என்ற கேள்விகள் அரசை நோக்கி எழும் இந்நேரத்தில் அனைவரும் சேர்ந்து செய்தாக வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன..

கொலை நடந்த இடம் ஆசிரியர் ஓய்வறை :

ஒரு தனியார் பள்ளியிலோ அரசு உதவி பெறும் பள்ளியிலோ இவ்வளவு எளிதாக ஒருவர் வகுப்பறைக்குள் சென்றுவிட முடியாது.

இது அரசு பள்ளி ஆகவே அவர் வகுப்பறைக்கு சென்று இந்த நிகழ்வு அரங்கேறியிருக்கிறது.

இன்னொன்றையும் இதில் யோசிக்க வேண்டும். அவர் முறையாக ஆசிரியரை சந்திக்க வேண்டும் என்று வாட்ச்மேன் அதுக்கு அடுத்த நிலையில் உள்ள காவலர் அடுத்து துணை முதல்வர் தலைமை ஆசிரியர் வரிசையாக அனுமதி வாங்கிக்கொண்டு ரமணி ஆசிரியையை பார்த்து அந்த நேரத்தில் கத்தியை எடுத்து குத்தி கொலை செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

ஆக, இங்கு பாதுகாப்பு சட்டம் தேவை என்பது அடுத்த கட்டம். ஆனால் இளைஞர்களின் மனிதர்களின் மாணவர்களின் மக்களின் மனநிலையை அந்த மன அழுத்தத்தை மாற்றுவதற்கான நிகழ்வினை இச்சமூகம் உடனடியாக செய்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

முழுக்க முழுக்க தொழில்நுட்பக் கருவிகளோடு இயங்கிக் கொண்டிருக்கும் நாம் மனிதர்களோடு இயங்குவதற்கு பழக்க வேண்டும் பழக வைக்க வேண்டும்.

தோல்வியை கண்டு துவழக் கூடாது சகிப்புத்தன்மை குற்றத்தை ஒப்புக் கொள்ளுதல் தவறுகளை ஏற்றுக்கொண்டு திருந்தச் செய்தல் இது போன்ற பழக்க வழக்கங்களை குழந்தைகளில் இருந்து வளர்க்க வேண்டும்.

இறைவனால் படைக்கப்பட்ட இந்த பிரபஞ்சத்தில் மகத்தான சக்தி கொண்ட மனிதனுக்கு குணங்கள் என்ற ஒன்றையும் படைத்து அதில் கோபம் சிரிப்பு சந்தோஷம் கவலை மகிழ்ச்சி ஏமாற்றம் அழுத்தம் ஏக்கம் எல்லாவற்றையும் வைத்து உலகில் நடமாட விட்டிருக்கிறார்.

ஒன்று கிடைக்கும் போதோ பெரும்போதோ அதீத மகிழ்ச்சியான ஒருவன் அடுத்த நிமிடமே ஏதோ ஒரு காரணத்திற்காக கவலை கொள்கிறான். வகுப்பறையில் ஒரு பாடவேளை மகிழ்வாக இருக்கும் மாணவன் இன்னொரு பாட வேளையில் ஆசிரியரை கேலி செய்கிறான். விளையாட்டுப் பாட வேளையில் மகிழ்வாக இருக்கும் மாணவன் வகுப்பறையல் அமரும் போது சேட்டை செய்கிறான்.

ஆக, ஒரு மனிதனுக்குள் மாணவருக்குள் எல்லா குணங்களும் இருக்கிறது. அதை எப்படி மடை மாற்றி இது தவறு. இது சரி என்பதை அவர்களுக்கு முன் வருகிற நாம்தான் பின்னால் வருகிறவர்களுக்கு வழி காட்ட வேண்டும்.

ஆக, இங்கே வழிகாட்டல் ஒன்று அவசியம் ஆகிறது எனது அருமை இளைஞர்களை மாணவர்களே!

ஏதோ ஒரு காரணத்திற்காக தான் நாம் இங்கே படைக்கப்பட்டிருக்கிறோம். நாம் வந்ததன் நோக்கம் இன்னொரு சக மனிதரை மனிதனை மாணவனை மாணவியை காதலனை காதலியை அம்மாவை அப்பாவை உடன் பிறந்தவர்களை உறவினர்களை மற்ற உயிரினங்களை மகிழ்விப்பதாகத்தான் இருக்க வேண்டும்.

அதை விட்டு விட்டு இவர்களை எல்லாம் ஏதேனும் ஒரு காரணம் சொல்லி துன்பத்தை விளைவிப்பது நமது நோக்கமாக இருக்கக் கூடாது.

நாம் படைக்கப்பட்டதன் நோக்கமே மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
இல்லையா, என்னால் இந்த சமூகத்திற்கு மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு துளி துன்பம் கூட வரக்கூடாது என்ற எண்ணம் நம் மனதில் ஓட வேண்டும்.

அந்த எண்ணத்தை இளம் வயதிலேயே கற்பிக்கப்பட வேண்டும். அது இன்றைய தலைமுறைக்கு மிக அவசியமான ஒன்று. ஏமாற்றங்களும் வலிகளும் இயக்கங்களும் பல தீவிரமான உணர்வுகளை தூண்டி விடுவதன் காரணமாகத்தான் இது போன்ற நிகழ்வுகள் மிக இயல்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிகழ்வுக்கு பின்னால் என்று நாம் யோசிக்கும் போது ஒரு குடும்பம் தன்னுடைய மகளை இழந்திருக்கிறது. அவள் ஆசிரியராகி அக்குடும்பத்தை தலை நிமிர செய்திருப்பாள் இச்சமூகத்திற்கு அவளால் ஆன உதவிகளை செய்திருப்பார்.

அங்கே மதனின் வாழ்க்கை இனி என்னாகுமோ சிறைச்சாலையில் அவரின் குடும்பமும் இன்று பொருளாதார ரீதியாகவும் மற்றவற்றிலும் மிகப்பெரிய ஒரு இழப்பை சந்திக்க வேண்டியது இருக்கும்.

ஆக இரண்டு குடும்பங்களுக்குமே இது ஒரு துன்பமான நிகழ்வு தான்.

இனி இது போன்ற நிகழ்வுகள் நடக்கா வண்ணம் இளைஞர்களே ஒரு நிமிடம் ஒரு நிமிடம் மட்டும் நீங்கள் செய்யப் போகும் காரியங்களை யோசித்து விட்டு செய்யுங்கள் கண்டிப்பாக மிகப்பெரிய ஒரு மாற்றத்தை உணர்வீர்கள்.
.
ஒரே ஒரு நிகழ்வு அதை மட்டும் வாசித்து விடுங்கள் முடித்து விடுகிறேன்.

அழகான குடும்பம் அம்மா அப்பா ஒரு குழந்தை தனி குடும்பம். காலை நேரம் பொதுவாக என்ன நடக்கும் அப்பா நாளிதழ் வாசித்துக் கொண்டிருக்கிறார். அம்மா அடுப்பாங்கரையில் வேலை செய்து கொண்டிருக்கிறார். வழக்கம்போல் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.

காபி கொண்டு வந்த அம்மா, அப்பாவிடம் நீட்டுகிறார் வைத்துவிட்டு போ என்று நாளிதழில் மூழ்குகிறார் அப்பா காபி அவருக்கு கீழே இருக்கிறது.

விளையாடி முடித்த குழந்தை வேகமாக வீட்டுக்குள் வர கால் தடுக்கி காபி சிந்தி விட்டது.

இனிதான் காட்சிகள் ஆரம்பம் :

இது முதல் காட்சி

காபி கொட்டியவுடன் அப்பா, சனியனே, பார்த்து வரக்கூடாது என்று கோபத்துடன்…

ஏய் இங்க வா என்று மனைவியை நோக்கி கத்த

மனைவி வழக்கம் போல் கேட்கும் கத்தல் தானே ஆனால் இன்று சீக்கிரமாகவே கேட்கிறதே என்று வேகமாக ஓடி வருகிறாள்.

அருகில் வந்து பார்த்தால் பயத்துடன் மகள்… கோபத்துடன் அப்பா… கீழே காபி…
அவளுக்கு அது ஒரு பெரிய மேட்டரே இல்லை குழந்தையை வாரி அனைத்து கொண்டு இடுப்பில் சொருகி இருந்த சமையல் கட்டு துணியால் தரையை துடைத்து டம்ளர் எடுத்துக் கொண்டு குழந்தையை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார். செல்லும்போது பலவாறு எண்ணி இருப்பார்.

பேப்பர் படிக்கிறார் பேப்பர் படிச்சிட்டு என்ன பாரிசு கா போகிறார். 10 மணி அலுவலகத்திற்கு செல்வார் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை…

அதற்குள் இவ்வளவு கோபம் என்று மகளை அணைத்துக் கொண்டே செல்வார் இது முதல் காட்சி…

இங்கே கோபத்துடன் அப்பா ஆற்றாமையுடன் அம்மா அழுது கொண்டே மகள் மூவரும் மன அழுத்தத்தில் காலை வேளையிலேயே கலங்கி நிற்கிறார்கள்…

அன்றைய நாள் முழுவதும் இதே மன உணர்வு தான் இருக்கும் எப்படி வேளையிலோ பள்ளியிலோ முழு கவனத்தை செலுத்துவார்கள் யோசித்துப் பாருங்கள்.

இது இரண்டாவது காட்சி

அதே அப்பா… அதே அம்மா… அதே மகள்… அதே காபி… அதே டம்ளர்… அதே கால் தடுக்கி சிந்தி விட்டது…

இப்போது அப்பா நாளிதழை எரிந்து விட்டு மகளை தூக்கி ஏம்மா அடி ஒன்னும் படலையே… ஏம்மா இங்கே வா காபி கொட்டி விட்டது பார் என்று அழைக்க…

அடுப்பாங்கரையில் வேலை செய்து கொண்டிருந்த அம்மா என்ன என்று பார்க்க வர

அப்பாவின் அரவணைப்பில் மகள் கீழே காபி வழக்கம் போல் இடுப்பில் இருந்த துணியை எடுத்து துடைத்துக் கொண்டே ஏங்க குடிச்சிட்டு தான் பேப்பர் படித்திருக்கலாம் இல்ல என்கிறார்.

ஏம்மா நான் கொஞ்சம் நாளிதழ் வாசிப்பில் மூழ்கி விட்டேன் நீ கொஞ்சம் ஓரமாக வைத்திருக்கிறலாம் தானே என்று அப்பா சொல்ல…

எனக்கு அடுப்பாங்கரைல ஆயிரம் வேலை இருக்கிறது நீங்கள் தான் கொஞ்சம் தள்ளி வைத்திருக்கிறலாம் குடித்துவிட்டாவது படித்திருக்கலாம் தானே.. என்று கொஞ்ச அங்கே நடக்கும் அந்நியோன்யமான உரையாடலில் குழந்தை வாய் திறக்கிறது.

எப்பா சாரிப்பா நான் தான் கவனமில்லாமல் ஓடி வந்து விட்டேன் இனிமேல் கவனமாக வருகிறேன் அப்பா…

அம்மா சாரிமா… என்று சொல்வாள் குழந்தை…

இதுதான் கல்வி விவேகானந்தர் சொல்வார் ஒரு மனிதனுக்குள் உள்ள கல்வி தானாகவே வெளிவர வேண்டும் அதற்கு ஏற்ற சூழ்நிலையை தான் நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் அப்படித்தான் இந்த குழந்தையும் சூழ்நிலை அவளை சாரிப்பா என்று சொல்ல வைத்தது…

ஆக இறுதியாக ஒன்றே ஒன்று எனது அருமை இளைஞர்களே மாணவர்களே மனிதர்களே ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வோம்.

வேண்டாத குணங்களை எல்லாம் வீழ்த்தி விடுவோம். நம்மை சீரழிக்கும் குணங்கள் அது ஒரு நிமிடம் வாழ்க்கையை யோசித்துப் பார்ப்போம். நாம் யாருக்கும் தேவையில்லை என்று உணரலாம். ஆனால் யாருக்கோ ஒருவருக்கு நீங்கள் தான் உலகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே. இனி ஒரு மாற்றம் படைப்போம் சமூகத்தில் இது போன்ற நிகழ்வுகளை களைவோம்.

ஒன்று சொல்வார்கள் மருத்துவர் தவறு செய்தால் ஆறு அடியில் குழி தோண்ட வேண்டும். நீதிபதி தவறு செய்தால் ஆறு அடி தூக்கில் சாக வேண்டும்.
ஆனால், ஒரு ஆசிரியர் தன்னுடைய கடமையை தவறிவிட்டால் ஆறடி உயரத்தில் நடை பிணங்களாக தான் இந்த சமூகம் இருக்கும்.

ஆக சமூக மாற்றத்தின் பின்னணியில் மிகப்பெரிய பங்கு வகிப்பது ஆசிரியர்கள் தான். ஆசிரியர்களை நாம் தெய்வமாய் மதிக்காவிட்டாலும் அவர்களுக்கான உரிமையையும் கடமையையும் ஆற்றுவதற்கு நாம் இடம் கொடுப்போம்.

ஓர் உறக்கம் இல்லா இரவு மீண்டும் வரும் என்று நான் நேற்றைய காலை விடியவில்லை…

இன்று முடிந்து இருக்கிறது மீண்டும் ஒரு விடியல்…

இவ்வளவையும் வாசித்திருப்பீர்களா என்று அறியேன் வாசித்திருப்பீர்கள் என்ற நம்பிக்கை உடன்…

 

 

 

 

 

 

 

 

 

 

பாலகிருஷ்ணன், பட்டதாரி ஆசிரியர்.
சி பா ஆதித்தனார் அரசு மேல்நிலைப்பள்ளி,
காயாமொழி, தூத்துக்குடி மாவட்டம்.
sakibala2023@gmail.com

 

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *