திரும்பி பார்க்க வைக்கும் திருமா-வுக்கு இன்னிக்கு 61வது பிறந்த தினம்!
திருமா-வுக்கு இன்னிக்கு 61வது பிறந்த தினம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று தனது 61-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
அரியலூர் மாவட்டம், செந்துரை அருகிலுள்ள அங்கனூர் கிராமத்தில் ஆகத்து 17, 1962-ம் ஆண்டு ராமசாமி, பெரியம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
தமிழில் பெயர் வைப்பதை விரும்பியவர், கட்சித் தொண்டர்களோடு சேர்த்து, தன் தந்தையின் பெயரையும் தொல்காப்பியன் என்று தமிழில் மாற்றி தன்னுடைய பெயரை தொல்.திருமாவளவன் என்று மாற்றினார்.
தான் பிறந்த சொந்த ஊரில் பள்ளிப்படிப்பை முடித்தவர், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் பி.யூ.சி., சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை வேதியியல், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை குற்றவியல் பயின்றார்.
பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் 1988-ல் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். அரசு தடயவியல்துறையில் அறிவியல் உதவியாளராக 1999-ம் ஆண்டு வரை அரசுப் பணியில் அமர்ந்தார்.
புரட்சியாளர் அம்பேத்கரின் மனைவி சவீதா ஆரம்பித்த `பாரதீய தலித் பேந்தர்’ அமைப்பின் தமிழக அமைப்பாளரான போராளி மலைச்சாமியுடன் இணைந்து செயல்பட்டு 1982-ல் தன்னை அவ்வமைப்பில் இணைத்துக்கொண்டார்.
1983-ல் நடந்த ஈழத்தமிழர்களுக்கான மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைத்தார். 1986-ம் ஆண்டு இலங்கையில் நடந்த தமிழ்க் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் நேரில் சென்று கலந்துகொண்டார்.
1989-ம் ஆண்டு ‘பாரதிய தலித் பேந்தர்ஸ்’ அமைப்பின் தமிழக அமைப்பாளர் மலைச்சாமி மறைய, 1990-ல் அந்த அமைப்பின் மாநில அமைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் பின்னர் அமைப்பின் பெயரை இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என மாற்றியதோடு, புதிய கொடியையும் அறிமுகப்படுத்தினார். மீண்டும் 1991-ம் ஆண்டு அமைப்பின் பெயரை விடுதலைச் சிறுத்தைகள் என மாற்றினார்.
1999-ம் ஆண்டு தொடங்கிய திருமாவின் அரசியல் பயணம் இன்றுவரை தொடர்கிறது. எம்எல்ஏ, எம்.பி. என பொறுப்பு வகித்து வரும் இவர் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.












Leave a Reply