கடவுள் இருக்கிறாரா, இல்லையா? மனசுக்கு திருப்தியே அடையாத இரண்டு கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன!
கடவுள் இருக்கிறாரா, இல்லையா?
யார் என்னதான் சொன்னாலும், மனசுக்கு திருப்தியே அடையாத இரண்டு கேள்விகள் இருக்கின்றன.
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? இன்னொரு கேள்வி, இறந்த பிறகு – உயிர் என்ன ஆகிறது? இதுக்கு யார், என்னதான் சமாதானம் கொடுத்தாலும், நம்ப முடிவதே இல்லை.
முதல் கேள்வி சம்பந்தமாக, ஓஷோ ஒரு கதையை நமக்கு சொல்லி இருக்கிறார். படித்துப் பாருங்கள்.
குருடன் ஒருவன் புத்தரிடம் கொண்டுவரப்பட்டான். அவன் ஒரு தத்துவவாதியாக மிகவும் வாதாடுபவனாக இருந்தான். அவன் கிராமத்தாரிடம் வெளிச்சம் என்பதே கிடையாது.
நான் குருடனாக இருப்பதை போலவே நீங்கள் எல்லோரும் குருடர்கள். நான் அதை அறிந்து கொண்டேன், நீங்கள் அதை அறியவில்லை, அதுதான் வித்தியாசம் என்று கூறி வாதிட்டான்.
இதை அவன் கண்கள் உள்ள கிராம மக்களிடம் கூறி கொண்டிருந்தான். அந்த கிராமத்து மக்களே ஒன்றும் பேச முடியாத அளவிற்கு அவன் வாதிடுவதில் வல்லவனாக இருந்தான். அவனை என்ன செய்வது என்று தெரியாமல் கிராமத்தார் தவித்தனர்.
அவன் அவர்களிடம் நீங்கள் கூறும் வெளிச்சத்தை கொண்டு வாருங்கள். நான் அதை ருசித்து பார்க்கிறேன். இல்லை நுகர்ந்து பார்க்கிறேன். இல்லை, தொட்டு பார்க்கிறேன். அதன் பின்தான் நான் நம்ப முடியும் என்று கூறினான்.
வெளிச்சத்தை தொடமுடியாது, ருசிக்க முடியாது. நுகரவும் முடியாது. கேட்கவும் முடியாது. ஆனால் இந்த குருட்டு மனிதனுக்கு உள்ளவையோ இந்த நான்கு புலன்களும்தான். ஆகவே அவன் வெற்றியடைந்து விட்டதாக சிரிப்பான்.
பாருங்கள் ஒளி என்று கிடையாது. உண்டு எனில் எனக்கு நிருபித்து காட்டுங்கள் என்று கூறுவான்.
புத்தர் அந்த கிராமத்துக்கு வந்த போது அங்குள்ளவர்கள் அவனை அவரிடம் அழைத்து வந்தார்கள். அவனது வரலாறு முழுவதையும் புத்தர் கேட்டார். அதன் பின் அவர் இவனுக்கு நான் தேவை இல்லை.
வெளிச்சத்தை பற்றி இவனிடம் பேசுவது முட்டாள்தனம். இவனோடு நீங்கள் வாதிட்டால் அவன்தான் வெற்றி பெறுவான். அவனால் வெளிச்சம் இல்லை என்பதை நிருபிக்க முடியும்.
எனவே இவனை என் மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள் என்று கூறினார். ஆறு மாத காலத்தில் புத்தருடைய மருத்துவர் அவனை குணப்படுத்தினார். அவன் புத்தர் கால்களில் வந்து விழுந்தான்.
நீங்கள் மட்டும் இல்லையெனில் நான் என் வாழ்நாள் முழுவதும் வெளிச்சத்தை பற்றி விவாதம் செய்தே கழித்திருப்பேன். ஆனால் வெளிச்சம் உள்ளது. இப்போது நான் அதை அறிகிறேன் என்று கூறினான்.
இப்போது புத்தர் நீ அதை நிருபிக்க முடியுமா? வெளிச்சம் எங்கே உள்ளது? நான் அதை ருசிக்க வேண்டும். அதை தொட வேண்டும். நுகர வேண்டும் என்று கேட்டார். உடனே அந்த முன்னாள் குருடன்.
அது முடியாத காரியம் அதை பார்க்க மட்டும்தான் முடியும் என்பதை இப்போதுதான் நான் அறிகிறேன். அதை அடைவதற்கு வேறு வழி இல்லை. என்னை மன்னித்து விடுங்கள் என்றான்.
ஓஷோ சொல்கிறார்: ஞாபகத்தில் கொள்ளுங்கள் எதிர்மறையானவற்றை மிக எளிதில் நிருபித்து விடலாம். ஆனால் நேர்மறையானவற்றை நிரூபித்தல் சாத்தியமில்லை.
எனவே தான் நாத்திகன் மிகவும் விவாதிப்பவனாகவும் ஆத்திகன் எப்போதும் தோல்வியுறுபவனாகவும் இருக்கிறான். அவன் கடவுள் அல்லது ஆன்மா இருப்பதை நிரூபிக்க முடியாது.
Leave a Reply