உழைக்கும் மனுஷி!

Share Button

அதிகாலையில்
முதல் ஆளாக எழுந்து
வாசல் பெருக்கிக் கோலம் வரைந்து
அலைந்து திரிந்து தண்ணீர் சேகரித்து
குவிந்த பாத்திரங்கள் அழுக்குப் போக்கி
வேகும் உயிரை நீரில் அமிழ்த்தி
அழுது அடம்பிடிக்கும்
குழந்தைகளைக் குளிப்பாட்டி
அரக்கப்பரக்க ஓடியாடி
சமையல் முடித்து
அலும்புப் பிடித்த பிள்ளைகளுக்கு
ஊட்டிவிட்டு
கணவருக்கும் சேர்த்து சாப்பாடு கட்டி
கன்னம் சிவக்க பரிமாறியதில் திட்டுவாங்கி
பற்றியெரியும் வயிற்றில்
பசியைக்கொட்டி
விரைந்தோடும் நடையோட்டத்தில்
நேரம் சுருக்கி
அலுவலகக் கதவை அச்சத்துடன் திறந்து
பூனையாய் உட்புகும் அதிகார அறையானது
கழுத்தைநெரித்து
மன்னித்து வெளியில் தள்ள
தாகம் தீரத்தீர வழிந்தோடும்
சுடுகண்ணீரை
வாரிப் பருகும் காலம் கடிந்து
வேர்வையுடன் வழியும்
எச்சில்பார்வைகளைக் கழுவி
படுக்கையில் களைத்து கண்கள் சொருகினால்
குடலைக் குமட்டும் பிராந்தி நெடிகளோடு
உடலை உணவாய் உயிருடன் குதறும்
தாலி கட்டிய மிருகம் அவளை!

……………………..

அமுதாராம்
ராஜீவ் காந்தி நகர், மன்னார்குடி.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *