கிருஷ்ணகிரி அருகே கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக குடிக்க தண்ணீர் வழங்காததைக் கண்டித்து தானம்பட்டி கிராம மக்கள் குடிநீர் தொட்டிக்கு மாலை அணிவித்து காலிக்குடங்களுடன் வினோத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது..
கிருஷ்ணகிரி ஒன்றியம் கொண்டேப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தானம்பட்டி கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கு 500-க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. அதிக அளவில் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வரும் இந்த கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சரிவர குடிக்க தண்ணீர் வழங்காததால் தானம்பட்டி கிராமமக்கள் குடிக்க தண்ணீர் எடுக்க சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல வேண்டிய நிலை உள்ளதால் கிராம மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
இது தொடர்பாக குடிக்க தண்ணீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் இதுவரை தண்ணீர் கொடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் காலிக் குடங்களுடன் வந்த 300 ம் மேற்பட்ட பெண்கள் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர்த் தொட்டிக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்தபடி தண்ணீர் வழங்க மறுக்கும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கினைக் கண்டித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கடந்த மூன்று மாதங்களாக குடிக்க தண்ணீர் இன்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளாகி இருப்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் , ஆகையால் தானம்பட்டி கிராமத்திற்கு ரேஷன் பொருள்கள் வேண்டாம், குடிக்க ஒரு குடம் தண்ணீராவது வழங்க வேண்டும் இல்லையென்றால், இனி மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
குடிக்க தண்ணீர் கேட்டு கிராம மக்கள் தண்ணீர் தொட்டிக்கு மாலை அணிவித்து ஓப்பாரி வைத்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.













Leave a Reply